Fact Check: 2009-ம் ஆண்டு இந்தியாவில் இ.வி.எம்.கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது தவறானது

Fact Check: 2009-ம் ஆண்டு இந்தியாவில் இ.வி.எம்.கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது தவறானது

புது தில்லி, விஷ்வாஸ் நியூஸ் – நாட்டிலேயே முதன்முறையாக 2009ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பயன்படுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலான பதிவு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் இந்தக் கூற்று தவறானது எனக் கண்டறிந்தது. 2004 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன, அதற்கு முன்பு அவை பல சட்டமன்றத் தேர்தல்களின் போது பயன்படுத்தப்பட்டன. 2001-ஆம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்களின் போது அனைத்து இடங்களிலும் இ.வி.எம்.கள் பயன்படுத்தப்பட்டன.

மேலும், 1998 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகியவற்றில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்களுடன் தொடங்கி பல்வேறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களின் போது இ.வி.எம்.கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டன.

வைரல் ஆவது என்ன?

சமூக ஊடக பயனர் ‘rbsonu_sr’, வைரல் பதிவை ( ஆர்க்கைவ் லின்க் ) பகிர்ந்து இவ்வாறு எழுதியுள்ளார், “இ.வி.எம். 2009-ல் வந்தது மற்றும் காங்கிரஸ் அரசாங்கத்தால் நிறுவப்பட்டது, இ.வி.எம்.கள் ஹேக் செய்யப்பட்டிருந்தால் அதை முதலில் காங்கிரஸ் செய்திருக்கும்… மற்றும் பிஜேபி அதை செய்திருக்கும். உங்களை ஆட்சிக்கு வர அனுமதித்திருக்காது… இ.வி.எம்கள் ஹேக் செய்யப்படவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்..!”

விசாரணை:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக கூறப்படுகிற வைரலான கூற்றைச் சரிபார்க்க, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள ஆவணங்களைச் சரிபார்த்தோம். எங்கள் விசாரணையில், இ.வி.எம். (பதிப்பு – 3) இல் உள்ள ஸ்டேட்டஸ் பேப்பரின் நகலைக் கண்டறிந்தோம், இது இ.வி.எம். பயன்பாடு பற்றிய ஸ்டெப்-பை-ஸ்டெப் தகவலை வழங்குகிறது.

கிடைத்த தகவல்களின்படி, 1998-ல் இவிஎம் மூலம் தேர்தல் நடத்த ஒருமித்த கருத்து எட்டப்பட்டதைத் தொடர்ந்து, அவை மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டன.

பின்னர் 1999-ஆம் ஆண்டில், 46 நாடாளுமன்றத் தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன, ஹரியானா சட்டமன்றத் தேர்தலின் போது, 45 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு செய்யப்பட்டது.

2001-ஆம் ஆண்டில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் முழுக்க முழுக்க இ.வி.எம்.களைப் பயன்படுத்தி நடத்தப்பட்டன, மேலும் அது தொடர்ந்து பிற சட்டமன்றத் தேர்தல்களிலும் பயன்படுத்தப்பட்டது.

2004 மக்களவைத் தேர்தல்

2004 மக்களவைத் தேர்தல்களில், 543 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கு, இ.வி.எம்.கள் பயன்படுத்தப்பட்டன. 2018-ல் வெளியிடப்பட்ட இந்த ஆவணத்தின்படி, “2000-ம் ஆண்டு முதல், இந்தியாவில் மொத்தம் 113 மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும், மூன்று பொதுத் தேர்தல்களிலும் (2004, 2009 மற்றும் 2014) வாக்குப்பதிவின் போது இ.வி.எம்.கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.”

2019 மக்களவைத் தேர்தலும் முழுக்க முழுக்க இ.வி.எம்.கள் மூலம் நடத்தப்பட்டது. எனவே, 2009ல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு தொடங்கப்பட்டதாக வைரலான பதிவில் கூறப்பட்டுள்ள கருத்து தவறானது.

மே 19, 1982 அன்று, இந்திய அரசியலமைப்பின் 324 வது பிரிவின் கீழ் இ.சி.ஐ. வழிகாட்டுதல்களை வெளியிட்டதோடு, கேரளாவின் 70-பரவூர் சட்டமன்றத் தொகுதியில் 50 வாக்குச்சாவடிகளில் இ.வி.எம்.களைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு, 1982-83ல் 10 இடைத்தேர்தல்களிலும் இ.வி.எம்.கள் பயன்படுத்தப்பட்டன. இருப்பினும், குறிப்பிட்ட சட்டம் இல்லாததால், இந்தத் தேர்தல்கள் உச்சநீதிமன்றத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டன (ஏசி ஜோஸ் தாக்கல் செய்த தேர்தல் மனு 01, 1982) மற்றும் மார்ச் 5, 1984 அன்று, உச்ச நீதிமன்றம், ஒரு குறிப்பிட்ட சட்ட ஏற்பாடு இல்லாமல், இ.வி.எம்.களை தேர்தல்களில் பயன்படுத்த முடியாது என்று தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து, 1988 டிசம்பரில், பாராளுமன்றம் சட்டத்தில் திருத்தம் செய்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 இல் பிரிவு 61A-ஐச் சேர்த்தது, இ.வி.எம்.களைப் பயன்படுத்த இ.சி.ஐ.க்கு அனுமதி வழங்கியது. இந்தத் திருத்தம் மார்ச் 15, 1989ல் அமலுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக, அதிமுக – எதிர் – தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிறர் (2002 UJ (1) 387) என்கிற வழக்கில் 61A பிரிவு அரசியல் சாசனப்படி செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

இ.வி.எம்.கள் தொடர்பான சட்ட தலையீடுகள் மற்றும் வழக்குகள் பற்றிய விவரங்களை பின்வரும் விளக்கப்படத்தில் காணலாம்.

வைரலான பதிவு தொடர்பாக, விஷ்வாஸ் நியூஸ் மத்திய தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளரைத் தொடர்பு கொண்டது, அவர், 2004 பொதுத் தேர்தலில், அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் இ.வி.எம்.கள் மூலம் வாக்குப்பதிவு செய்யப்பட்டதையும், முந்தைய சட்டமன்றத் தேர்தல்களிலும் இ.வி.எம்.கள் பயன்படுத்தப்பட்டதையும் உறுதிப்படுத்தினார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்தக் கோரி நாட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 22 எகனாமிக் டைம்ஸில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, “வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச் சீட்டைப் பயன்படுத்துவதற்கான மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. எந்த அமைப்புமே பரிபூரணமானது கிடையாது என்று நீதிமன்றம் கூறியது. இந்த பொதுநல மனுவை நியாய பூமி என்ற அரசு சாரா அமைப்பின் சார்பில் சுப்பா ராவ் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் அவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்படலாம், எனவே தேர்தலின் போது பயன்படுத்தக் கூடாது என்று கூறியிருந்தார்.”

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, 2019 பொதுத் தேர்தல்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி மட்டுமே நடத்தப்பட்டன. இ.வி.எம்.கள் தொடர்பான பிற வைரல் கூற்றுகளுக்கான உண்மை சரிபார்ப்பு (ஃபேக்ட் செக்) அறிக்கைகளை இங்கே படிக்கலாம்.

வைரலான பதிவைப் பகிர்ந்த பயனருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் ஐந்தாயிரம் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி (ஆர்க்கைவ் லின்க்), லோக்சபா தேர்தலில் ஏற்கனவே நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் நடந்துள்ளன, ஐந்தாவது கட்டம்
மே 20 அன்று திட்டமிடப்பட்டுள்ளது, இது எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 49 இடங்களுக்கான வாக்குப்பதிவுகளை உள்ளடக்கியருக்கும்.

முடிவு: 2009-ம் ஆண்டு முதல் இ.வி.எம்.கள் நடைமுறைக்கு வந்ததாக கூறப்படும் கூற்று தவறானது. 2004-ம் ஆண்டில், நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் உதவியுடன் தேர்தல் நடத்தப்பட்டது, அதற்கு முன்பு அவை பல சட்டமன்றத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டன. 2001ல் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க சட்டசபை தேர்தல்களின் போது அனைத்து இடங்களிலும் இ.வி.எம்.கள் பயன்படுத்தப்பட்டன. மேலும், 1998 ஆம் ஆண்டு மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல்களுடன் தொடங்கி பல்வேறு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களின் போது இ.வி.எம்.கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டன. 2004, 2009, 2014 மற்றும் 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தல்களும் இ.வி.எம்.களைப் பயன்படுத்தி நடத்தப்பட்டன, மேலும் 2024 மக்களவைத் தேர்தல்களும் இ.வி.எம்.களைப் பயன்படுத்தி நடத்தப்படுகின்றன.

Misleading
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்